உதகையில் அந்தமானுக்கு சுற்றுலா சென்றவரின் வீட்டிலிருந்து சுமார் 50 பவுன் நகை மாயமாகியுள்ளது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உதகை, தேனாடுகம்பை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் அப்பகுதியில் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் அந்தமானுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவரது இரு மகன்களின் வீடுகளும் அருகிலேயே உள்ளன. இந்நிலையில் சுப்பிரமணியின் வீடு பூட்டியிருப்பதாக கடந்த 2 நாள்களுக்கு முன்னர்தான் அவரது மகனுக்குத் தகவல் தெரிய வந்ததாகவும், சுப்பிரமணி யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சுற்றுலா சென்று விட்டதாகவும்
கூறப்படுகிறது.
இந்நிலையில் சுற்றுலா முடிந்து வியாழக்கிழமை வீட்டுக்கு திரும்பிய பின்னர் சுப்பிரமணியின் மனைவி லட்சுமி, வீட்டிலிருந்த பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் இருந்த சுமார் 50 பவுன் நகைகளை காணவில்லை.
இதுதொடர்பாக தேனாடுகம்பை காவல் நிலையத்தில் சுப்பிரமணி தெரிவித்த புகாரையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டின் கதவையோ, ஜன்னலையோ உடைக்காமல் உள்ளே நுழைந்து நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அதே இடத்தில் மீண்டும் சாவியை வைத்துவிட்டு சென்றுள்ளதாக சுப்பிரமணி கூறி வருவதால் போலீஸார் இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.