கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்தில் அரசுப் பள்ளியில் மின்சாரம் பாய்ந்து மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் மின் துறையைக் கண்டித்து பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை பகுதியிலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தவர் ஹரிஹரன். இவர் பள்ளி மேல்தளத்தில் இருந்த பந்தை எடுக்க சென்றபோது அங்கு தாழ்வாக சென்ற மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். பள்ளிக் கட்டடம் அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றியமைக்கவும், சேதமடைந்த கட்டடத்தை மாற்றி புதிய கட்டடம் கட்டித் தரவும் வலியுறுத்தி குழந்தைகளின் பெற்றோர் ஏற்கெனவே வலியுறுத்தி வந்த நிலையில் அது சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மின்சாரம் பாய்ந்து மாணவர் உயிரிழந்துள்ளதால் ஆத்திரமடைந்த பெற்றோரும், மாணவர்களும் வியாழக்கிழமை பள்ளி முன் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீஸார், வருவாய்த் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கைகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
காலை 9 மணி அளவில் தொடங்கிய போராட்டம் 11 மணி வரை நீடித்தது.