அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முகவராகப் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் மாவட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றும் நேர்காணல் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நீலகிரி மாவட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி:
நீலகிரி கோட்டத்தில் அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக முகவர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி முகவராகப் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை ( செப்டம்பர் 24 ) காலை 10 மணிக்கு அஞ்சலக கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், உதகமண்டலம் அலுவலகத்தில் நடைபெற உள்ள நேர்காணலில் வயது, படிப்பு உள்ளிட்ட தக்க ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.
இதற்கான தகுதி 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 5,000 மக்கள் தொகை இருக்கும் இடத்தில் வசிப்பவராகவும், 18 வயது முதல் 60 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். முன்னாள் ஆலோசகர்கள், முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் மண்டலத் தொழிலாளர்கள், சுயஉதவிக் குழுக்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், சுயவேலை செய்யும் இளைஞர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம்.
மேலும் தகவலுக்கு அருகிலுள்ள அஞ்சல் நிலையத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.