கோத்தகிரி பகுதியில் உள்ள மிளிதேன் கிராமத்தில் செப்டிக் டேங்கிற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்த காட்டெருமையை உடனடியாக மீட்காததால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
கோத்தகிரி வனப் பகுதியில் இருந்து காட்டெருமை, கரடி சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது நகரப் பகுதிகளுக்குள் புகுந்துவிடுகின்றன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை இங்குள்ள செப்டிக் டேங்கிற்காக தோண்டப்பட்ட குழியில் காட்டெருமை விழுந்துவிட்டது. காட்டெருமையின் சப்தம் கேட்டு அங்கு சென்றுபார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகியும் வனத் துறையினர் வராததால் காட்டெருமை அவதிப்பட்டது. காட்டெருமை விழுந்து கிடந்த பகுதி கோத்தகிரி வனத் துறையின் கட்டுப்பாட்டில் வராது என்றும், கட்டபெட்டு வனப் பகுதிக்கு உள்பட்டது என்றும் கூறி, காட்டெருமையை மீட்பத்தில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குறுகிய செப்டிக் டேங்க் குழிக்குள் கழுத்துத் திரும்பிய நிலையில் நீண்டநேரமாக அவதிபட்டு வந்த காட்டெருமை இறந்துவிட்டது. அதன் பிறகு அங்கு சென்ற வனத் துறையினர் பொக்லைன் இயந்திர ஓட்டுநர் இல்லாததால் காட்டெருமையை மீட்க முடியாமல் போனதாகத் தெரிவித்தனர். இறந்த காட்டெருமையின் உடலை அதே இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ திங்கள்கிழமை (செப்டம்பர் 23) புதைக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். வனத் துறையினரின் அலட்சியப்போக்கால் காட்டெருமை இறந்துவிட்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.