உதகை அரசு கலைக் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
தமிழகத்தில் அனைத்து அரசு கலைக் கல்லூரிகளிலும் மரக்கன்றுகள் நடும் திட்டம் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தை சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து உதகை அரசு கலைக் கல்லூரியிலும் அதே நேரத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் பொறுப்பு முதல்வர் பா.முருகன் தலைமையேற்று மரக்கன்றினை நட்டு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். தொடர்ந்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் அமர் குஷ்வா மரக்கன்றை நட்டதோடு, கல்லூரியிலுள்ள ஒவ்வொரு மாணவரும் தமது வாழ்நாளில் ஒரு மரக்கன்றையாவது நட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து செஞ்சிலுவை சங்க நீலகிரி மாவட்டத் தலைவர் கேப்டன் கே. ஆர். மணி, மரக்கன்று நடுதல் மற்றும் பராமரித்தல் குறித்து விவரித்தார்.
விலங்கியல் மற்றும் வன விலங்கு துறைத் தலைவர் ஜெ. எபனேசர், பேராசிரியர் பா.ராமகிருஷ்ணன் ஆகியோரும் மரக்கன்றுகளை நட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக செஞ்சிலுவை சங்கத்தின் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரா. கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.