வயநாடு-பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையை முழுமையாக போக்குவரத்துக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை கண்டித்து கூடலூர் காங்கிரஸ் கமிட்டியினர் சனிக்கிழமை பேரணி நடத்தினர்.
கர்நாடக மாநிலம், பந்திப்பூர் வழியாக கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு முழுமையாக தடை விதிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு வார காலமாக வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரியில் அனைத்துக் கட்சிகள், பொதுநல அமைப்புகள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கூடலூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் வட்டாரத் தலைவர் என்.ஏ.அஷ்ரப் தலைமையில் மாநிலக் குழு உறுப்பினர்கள் கோஷி பேபி, அனஸ் எடாலத், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் செய்யது முகமது, மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஸ்பக், மாநிலச் செயலாளர் ரஷீத் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரி நகருக்கு பேரணியாகச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது, கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.கே.ஆப்ரஹாம் அனைவரையும் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.