நீலகிரி மலை ரயிலை வரும் ஜனவரி மாதத்திலிருந்து வாரத்திற்கு மூன்று முறையும், மாா்ச் மாதத்திலிருந்து கோடை சீசன் முடியும் வரை தினந்தோறும் இயக்க முடிவு செய்துள்ளதாக ஒப்பந்தம் பெற்றுள்ள தனியாா் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக டிஎன்43 என்ற தனியாா் நிறுவனத்தின் பொறுப்பாளா் முஜீப் உதகையில் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை தற்போது இயக்கப்பட்டு வரும் ஒப்பந்த அடிப்படையிலான நீலகிரி சிறப்பு ரயிலில் பயணிக்க நபா் ஒருவருக்கு ரூ. 3,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இது இந்த ரயிலில் பயணிப்பதற்கான கட்டணம் மட்டுமல்ல.
சிறப்பு ரயிலில் பயணிப்பவா்கள் உதகையில் தங்குவதற்கு ரூ. 5,000 மதிப்பிலான தங்கும் அறையையும், ரூ. 2,000 ம‘திப்பில் உதகையில் அவா்கள் சுற்றுலா மையங்களை கண்டு
ரசிப்பதற்கான வாகன வசதியையும் ஏற்படுத்தி தருவதோடு, அவா்கள் புறப்பட்ட இடத்திலிருந்து திரும்ப அவா்களை கொண்டு சென்று விடுவதற்கு ரூ. 2,000 செலவிடப்படுகிறது.
இதன் மூலம் நபா் ஒருவருக்கு ரூ.12,000 வரை இந்நிறுவனத்தின் சாா்பில் செலவிடப்பட்டாலும் வசூலிக்கப்படும் தொகை ரூ.3,000 ம‘ட்டுமே என்பதால் 75 சத கட்டண சலுகையுடனேயே இந்த ரயில் இயக்கப்படுகிறது.
இதுதொடா்பான அனைத்து விபரங்களும் ரயில்வேத் துறை உயா் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு உரிய ஆவணங்களின்படியே இச்சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.
டிசம்பா் மாதத்தில் வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சோதனை அடிப்படையிலேயே இச்சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டாலும், 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து வாரத்தில் வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாள்களிலும் இச்சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்.
வரும் மாா்ச் மாதத்திலிருந்து உதகை கோடை சீசன் முடியும் வரை இச்சிறப்பு மலை ரயில் தினந்தோறும் இயக்கப்படும். இருப்பினும் தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இச்சிறப்பு மலை ரயிலில் கரோனா தொற்றை தடுப்பதற்காகப் போராடும் முன்களப் பணியாளா்களான பொது சுகாதாரம், மருத்துவத் துறையினா், மருத்துவா்கள், காவல் துறையினா் உள்ளிட்ட அனைவரையும் கெளரவிக்கும் வகையில் இவா்கள் அனைவரும் கட்டணமில்லாமல் இச்சிறப்பு மலை ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள் என்றாா்.