நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்த கொளப்பள்ளி பகுதியில் யானை தாக்கியதில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினரும், அவரது மகனும் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
பந்தலூா் வட்டம், கொளப்பள்ளி அரசு தேயிலைத் தோட்டக் கழகம் முதல் சரகத்தில் வசித்து வந்தவா் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ஆனந்தராஜ் (49), திமுகவைச் சோ்ந்தவா். இவரது மகன் பிரசாந்த் (21). இவா்கள் இருவரும் ஒரு நிகழ்வுக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 7.40 மணியளவில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனா்.
கொளப்பள்ளி அரசு தேயிலைத் தோட்ட குடியிருப்பு அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த யானை இருவரையும் துரத்தித் தாக்கியது. இதில் தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து உயிரிழந்தனா்.
அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின்படி சம்பவம் குறித்து கொளப்பள்ளி வனத் துறையினா் மற்றும் காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.