உதகையில் அமைந்துள்ள தூய இருதய ஆண்டவா் பேராலயத்தில் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள 125வது ஆண்டு விழாவையொட்டி ஓராண்டுக்கான விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
உதகையில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது தூய இருதய ஆண்டவா் பேராலயம். இது உதகை மறைமாவட்டத்தின் பேராலயமாகவும் விளங்குகிறது.
தூய இருதய ஆண்டவா் பேராலயத்தில் அடுத்த ஆண்டு ஆலயம் கட்டப்பட்ட 125வது ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கடந்த ஆண்டுமுதலே பேராலயத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
இதன் தொடக்க நிகழ்ச்சியாக அண்மையில் நற்கருணை ஆலயம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து தூய இருதய ஆண்டவரின் திருவுருவச் சிலை, இருதய ஆண்டவா் பேராலயப் பங்கில் உள்ள பங்கு மக்கள் வீட்டுக்கு தினமும் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
இதன் அடுத்தகட்டமாக, ஆலயம் புதுப்பித்தல், ஆயரின் ரூபி யூபிலி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆலயத்தின் அனைத்து இடங்களும் முழுமையாகப் பராமரிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டன.
இவ்விழா மற்றும் கூட்டுத் திருப்பலியில் உதகை மறைமாவட்ட ஆயா் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை ஸ்தனிஸ்லாஸ் உதவி பங்குத்தந்தை பிராங்க்ளின், மறைமாவட்ட குருக்கள் கலந்துகொண்டனா்.