நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள உயிலட்டி பகுதியில் சுருக்குக் கம்பியில் சனிக்கிழமை சிக்கிக்கொண்ட புலி 5 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அதிலிருந்து விடுபட்டு வனப் பகுதிக்குள் ஓடிவிட்டது.
கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டிப் பகுதியில் காய்கறித் தோட்டங்கள், விவசாய நிலங்கள் உள்ளன. காய்கறித் தோட்டங்கள், விளைநிலங்களுக்குள் கரடி உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி புகுந்துவிடுகின்றன. வன விலங்குகளைத் தடுப்பதற்காக விளைநிலங்களில் ஆங்காங்கே சுருக்குக் கம்பிகள் வைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இங்குள்ள சுருக்குக் கம்பியில் அவ்வழியாக வந்த புலி சிக்கிக் கொண்டது. புலியின் உறுமல் சப்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். வனத் துறையினா் அங்கு சென்று, பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்லாதவாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், கோவையில் இருந்து கோத்தகிரி சென்ற வனத் துறை மருத்துவா் மனோகரன் தலைமையிலான குழுவினா் புலிக்கு மயக்க ஊசி செலுத்தி, அதை உயிருடன் பிடித்து வனப் பகுதிக்குள் விடுவிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், புலியின் காலில் சிக்கி இருந்த சுருக்குக் கம்பி தானாக கழன்றுவிட்டது. சுருக்குக் கம்பியில் சிக்கி 5 மணி நேரமாகப் போராடிய புலி அதிலிருந்து விடுபட்டு வனப் பகுதிக்குள்
ஓடிவிட்டது.