கோத்தகிரி அருகே புலிக்கு சுருக்கு வைத்த தோட்ட உரிமையாளர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய புலியினை ட்ரோன் மூலம் தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டிப் பகுதியில் பல்வேறு காய்கறி தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த தோட்டத்துக்கு அடிக்கடி வரும் கரடி உள்ளிட்ட வனவிலங்குகளை கட்டுப்படுத்துவதற்காக ஆங்காங்கே விவசாயிகள் சுருக்கு கம்பிகள் வைப்பது வழக்கம்.
இந்நிலையில் இந்த சுருக்கு கம்பியில் இவ்வழியாக வந்த புலியின் வலது கால் மாட்டிக் கொண்டது. இதையடுத்து, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி புலியை மீட்க முயற்சி செய்துகொண்டிருந்தனர். அப்போது புலி தனது வலது காலை கம்பியில் இருந்து விலக்கிக்கொண்டு தப்பி ஓடியது.
வனத்துறையினர் புலிக்கு ஏதாவது காயம் ஏற்பட்டு இருக்குமா என்று வனப்பகுதி முழுவதும் அதை தேடிப்பார்த்தனர். ஆனால், புலி அகப்படவில்லை. மேலும் மூன்று இடங்களில் கேமிராவை வைத்து அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதிலும் புலி சிக்கவில்லை.
இந்நிலையில், வனத்துறையினர் இன்று (திங்கள்கிழமை) மாலை ட்ரோன் கேமிரா மூலம் புலியினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.