குன்னூா் பகுதிகளில் உறைபனி காரணமாக, இரவு நேரங்களில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகிறது. இதன் காரணமாக தேயிலைத் தோட்டங்கள் கருகத் துவங்கியுள்ளன.
நீலகிரி மாவட்டம், குன்னுாா் சுற்றுப்புறப் பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வெலிங்டன் ஜிம்கானா, எடப்பள்ளி, பந்துமை, பகாசுரன் மலை அடிவாரப் பகுதிகளில், உறைபனியால் கடந்த இரண்டு நாள்களாக, இரவு நேரங்களில், ஜீரோ டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.
குன்னூரில் தென்மேற்கு பருவமழை குறைவாகவும், வடகிழக்கு பருவமழை அதிகமாகவும் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு இரு பருவமழைகளும் அதிக அளவில் இருந்ததால் நிலங்களில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக பனியின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.
இதன் காரணமாக எடப்பள்ளி, பந்துமை,சேலாஸ், கொலக்கம்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் பனியால் கருகத் துவங்கியுள்ளன. மேலும் பழ உற்பத்தியும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.