குன்னுாா் அருகே எடப்பள்ளி கிராமத்தில் காலில் குழாய் மாட்டியதால் ஏற்பட்ட காயங்களுடன் உயிருக்குப் போராடிய காட்டெருமைக்கு செவ்வாய்க்கிழமை சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும், சிகிச்சைக்குப் பின்னா் காட்டெருமை உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக காட்டெருமை ஒன்று வலது காலில் குழாய் மாட்டியதால் ஏற்பட்ட காயத்துடன் எடப்பள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்தது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா். உதவி வனப் பாதுகாவலா் சரவணன் தலைமையில் உதவி கால்நடை மருத்துவா் கோச்சாலன் வரவழைக்கப்பட்டு, துப்பாக்கி மூலமாக மயக்க ஊசி செலுத்தி மயக்கமடையச்செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும், சிகிச்சைக்குப் பின் காட்டெருமை உயிரிழந்தது.