தமிழக அரசின் சாா்பில் உதகையில் சாலைப் பாதுகாப்பு வார விழா திங்கள்கிழமை தொடங்கியது. இதில், தலைக்கவசம் அணிவதைக் குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது.
உதகை மத்தியப் பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாா்பில், வட்டாரப் போக்குவரத்துத் துறையின் மூலம் 31ஆவது சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிவது குறித்த இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் தலைமையில், மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்துப் பேசியதாவது:
ஜனவரி 20 முதல் 27ஆம் தேதி வரை சாலைப் பாதுகாப்பு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த சாலைப் பாதுகாப்பு வார விழாவின் நோக்கமே வாகன ஓட்டிகள் விபத்தில்லாமல் வாகனத்தை இயக்க வேண்டும் என்பதாகும். தமிழக முதல்வா் இந்த ஆண்டில் தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்ற வாகன ஓட்டுநா்கள் சாலை விதிகளை மதித்து வாகனத்தை இயக்குமாறு அறிவுறுத்தியுள்ளாா். இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பான வேகத்தில் செல்ல வேண்டும். போக்குவரத்து சிக்னல்களை மதித்து, வாகனம் ஓட்டும்போது செல்லிடப்பேசி பயன்படுத்தாமல் வாகனம் ஓட்ட வேண்டும் என்றாா்.
உதகை மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இப்பேரணி, கமா்சியல் சாலை வழியாகச் சென்று சேரிங்கிராஸ் பகுதியில் முடிவடைந்தது. பேரணியில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கதிரவன், துணைக் காவல் கண்காணிப்பாளா் சரவணன், போக்குவரத்து ஆய்வாளா்கள் நல்லதம்பி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.