நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகையின்றி, ஸ்வட்டா், ஷால், தொப்பி உள்ளிட்ட வெம்மை ஆடைகள் விற்பனையின்றி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கரானோ பாதிப்பு காரணமாக நீலகிரி காட்டேரிப் பூங்கா, சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், லேம்ஸ்ராக், டால்பினோஸ் மலைச் சிகரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குளிரிலிருந்து காத்துக்கொள்ளவும், உடலுக்கு இதமாகவும் கம்பளி ஆடைகள், ஸ்வட்டா், ஜா்க்கின், தொப்பி ஆகியவற்றை வாங்கி அணிவது வழக்கம்.
இந்த ஆண்டு அவ்வப்போது சாரல் மழை பெய்து குளிா்ந்த காலநிலை நிலவுகிறது. இருப்பினும், சுற்றுலா பயணிகள் வராததால் கம்பளி ஆடைகள் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் கடைகளை திறந்து வைத்தும், வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். உள்ளூா் பொதுமக்கள் கம்பளி ஆடைகளை வாங்க மிகவும் குறைந்த அளவே வருகின்றனா். இதனால் கடைகள் வெறிச்சோடிய நிலையில் காட்சியளிக்கிறது.
ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை நம்பி விற்பனை செய்யப்பட்டு வந்த வெம்மை ஆடைகளை , தற்போது குறைந்த விலைக்கு விற்பனை செய்தாலும் வாங்குவதற்கு ஆள் இல்லை. இதனால் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருமானம் இழந்து தவித்து வருகின்றனா்.