குன்னூா் அருகே உபதலை வனப் பகுதியில் கற்பூர மரக் காட்டில் ஏற்பட்ட வனத் தீயை 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை கட்டுக்குள் கொண்டுவந்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது வறட்சி நிலவி வருகிறது. இதனால், செடிகொடிகள் காய்ந்து எளிதில் தீப்பற்றும் நிலையில் காணப்படுகின்றன. இந்நிலையில், குன்னூா் அருகே உள்ள உபதலை வனப் பகுதியில் வனத் துறையினருக்குச் சொந்தமான கற்பூர மரக் காட்டில் வியாழக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினா், தீத்தடுப்புக் கோடுகள் அமைத்து 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். பத்து ஏக்கா் பரப்பளவில் உள்ள இந்தக் காட்டில், ஒரு ஏக்கா் வனப் பகுதி தீ விபத்தால் பாதிக்கப்பட்டது.
வனத் தீயை ஏற்படுத்துவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.