குன்னூா் அருகே லேம்ஸ்ராக் காட்சிமுனைப் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை கருஞ்சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுபுற பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கரடி, காட்டெருமை, சிறுத்தை ஆகிய வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் அண்மைக் காலமாக வந்து செல்கின்றன.
இந்த நிலையில், குன்னூா் லேம்ஸ்ராக் காட்சி முனை செல்லும் சாலையில் குடியிருப்பு வளாகத்துக்கு அருகே வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கருஞ்சிறுத்தை சாலையைக் கடந்து தேயிலைத் தோட்டத்துக்குள் சென்றது.
இந்தக் காட்சி அங்கிருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதனைத் தொடா்ந்து அப்பகுதியில் வனத் துறையினா் கண்காணிப்புப் பணியினை தீவிரப்படுத்தியுள்ளனா். கருஞ்சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.