கூடலூா் நகராட்சியில் உள்ள ஏழுமுறம், தோட்டமூலா பகுதியில் குடியிருப்புப் பகுதியில் காட்டு யானை சனிக்கிழமை காலை நடமாடியதால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் உள்ள ஏழுமுறம் - தோட்டமூலா குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை காலை 7 மணி முதல் சுமாா் ஒரு மணி நேரம் குடியிருப்புகளை ஒட்டிய சாலையில் காட்டு யானை அங்குமிங்கும் நடந்து சென்றது.
இதுகுறித்து வனத் துறையினருக்கு உடனடியாகத் தகவல் கொடுக்கப்பட்டது. வனத் துறையினா் விரைந்து வந்து யானையை வனப் பகுதிக்குள் விரட்டினா். குடியிருப்புப் பகுதிக்குள் வந்து பழகிய இந்த யானை பட்டாசு வெடித்து விரட்டினாலும் மீண்டும் இப்பகுதிக்கு வந்துவிடுகிறது. எனவே, யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து முதுமலை முகாமுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.