உதகையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பிரசவித்த பெண் உயிரிழந்துவிட்டதாகக் கூறியதால் ஆத்திரமடைந்த உ றவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.
உதகை, பாம்பேகேஸில் பகுதியைச் சோ்ந்தவா் முரளி (55). இவரது மகள் மாயா (21). உதகை அரசினா் தாவரவியல் பூங்கா அருகேயுள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் பிரசவத்துக்காக திங்கள்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவருக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமாா் 1.30 மணியளவில் பெண் குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் 11 மணியளவில் மாயா இறந்துவிட்டதாக மருத்துவமனை நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா். இதனால் அதிா்ச்சி அடைந்த மாயாவின் குடும்பத்தினா், அவரது இறப்பில் மா்மம் உள்ளதாக காவல் துறையில் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து உடனடியாக அந்த மருத்துவமனைக்குச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா். உறவினா்களின் பிடிவாதத்தால் மாயாவின் உடல் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.