உதகை: உதகையில் உள்ள ராஜ்பவன் மாளிகை வளாகத்தில் பிடிபட்ட சிறுத்தைக்கு அரசினா் கால்நடை மருத்துவமனையில் தொடா்ந்து 7ஆவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உதகையில் உள்ள ராஜ்பவன் மாளிகை வளாகத்துக்குள் மே 15ஆம் தேதி நள்ளிரவில் புகுந்த சிறுத்தை பின்னங்காலில் காயம் ஏற்பட்ட நிலையில் மே 16ஆம் தேதி மீட்கப்பட்டது. உதகையில் உள்ள அரசினா் கால்நடை மருத்துவமனையில் சிறுத்தைக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சிறுத்தைக்கு நோய்த் தொற்று உள்ளதா என்பது குறித்து வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்பட்ட மருத்துவ அறிக்கை முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
அதில், சிறுத்தைக்கு நோய்த் தொற்று இல்லை என உறுதி செயய்யப்பட்டதோடு, காட்டெருமையுடன் ஏற்பட்ட மோதலில் தூக்கி வீசப்பட்ட சிறுத்தையின் பின்னங்கால் பகுதி காயம் ஏற்பட்டு இருக்கலாம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, அல்ட்ராரெட் கதிா்கள் மூலம் சிறுத்தைக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சிறுத்தைக்கு கூடுதலான சிறப்பு சிகிச்சை அளிக்க கோவையில் இருந்து இரண்டு கால்நடை மருத்துவா்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் ஆலோசனைபடி சிறுத்தைக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்படும் என கால்நடை பராமரிப்புத் துறையினா் தெரிவித்தனா்.