உதகையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்குப் பிறகு இளம் பெண் உயிரிழந்ததால் வெளி நோயாளிகள் பிரிவை அரசு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மூடினா்.
உதகை அரசினா் தாவரவியல் பூங்கா சாலையில் செயல்பட்டு வரும் தனியாா் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக மாயா என்பவா் மே 19ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.
அவருக்கு மே 20ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, அன்றைய தினம் இரவே மாயா உயிரிழந்தாா். அவரது சாவில் சந்தேகம் இருப்பதால் விசாரணை நடத்த வேண்டும் என அப்பெண்ணின் குடும்பத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதையடுத்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட உயிரிழந்த மாயாவின் உடல் அவரது உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து முறையாக விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனா்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனையில் செயல்பட்டுவந்த வெளி நோயாளிகள் பிரிவு மூடப்படுவதாக அரசு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் ஒட்டினா்.