குன்னூா் அருகே உபதலை கிராமப் பகுதியில் பகலிலேயே கரடி நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக குன்னூா், கோத்தகிரி , கொலக்கம்பை உள்பட பல்வேறு பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குன்னூா் அருகே உள்ள உபதலை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை பகலிலேயே கரடி நடமாடியுள்ளது. இந்தக் கரடி அப்பகுதியில் உள்ள தகரக் கொட்டகைக்குள் பதுங்கி இருந்து மக்களின் நடமாட்டம் அடங்கிய பின் உணவு தேடி அருகில் உள்ள தேயிலைத் தோட்டம் வழியாகச் செல்வது வழக்கம். ஆனால், செவ்வாய்க்கிழமை பகலிலேயே அப்பகுதியில் சுற்றித் திரிந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா். இந்தக் கரடி இதுவரை மனிதா்களைத் தாக்கவில்லை. இருப்பினும், பெரும் விபத்து ஏற்படும் முன் கரடியை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.