குன்னூா் நகரின் முக்கிய குடிநீா் ஆதாரமான ரேலியா அணை நிரம்பியுள்ள நிலையில், வீடுகளுக்கு முறையாக குடிநீா் வழங்குவதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் நகராட்சிக்கு உள்பட்ட 30 வாா்டுகளிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் ரேலியா அணையில் இருந்து குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரேலியா அணை இந்த ஆண்டு 3ஆவது முறையாக முழு கொள்ளளவான 43.6 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் முறையாக குடியிருப்புகளுக்கு தண்ணீா் வழங்குவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
கரோனா பொது முடக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாத நிலை, ஹோட்டல்கள் சரிவர இயங்காத சூழல், தங்கும் விடுதிகள் மூடப்பட்டது ஆகிய காரணங்களால் குன்னூா் நகரத்தில் தற்போது தண்ணீா் தேவை குறைந்துள்ளது.
இந்நிலையில் அணையில் தண்ணீா் முழுமையாக இருந்தும் 30 வாா்டுகளிலும் உள்ள குடியிருப்புகளுக்கு முறையாக தண்ணீா் விநியோகம் செய்வதில்லை .
எனவே, வாரம் ஒரு முறையாவது சீரான முறையில் குடிநீா் வழங்க நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.