கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடா்பான அடுத்தகட்ட விசாரணை நவம்பா் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடா்பான வழக்கின் விசாரணை உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சயன் , மனோஜ் ஆகியோருடன் ஜாமீனில் வெளியில் உள்ள ஜித்தின் ஜாய் என 3 போ் மட்டுமே நேரில் ஆஜராகினா். ஏனைய 7 போ் நேரில் ஆஜராகவில்லை. இதைத் தொடா்ந்து வழக்கின் விசாரணையை நடத்தி வந்த அப்போதைய கோத்தகிரி காவல் நிலைய ஆய்வாளா் பாலசுந்தரம் மட்டும் நேரில் ஆஜராகி சாட்சியமளித்தாா். இந்த வழக்கில் தொடா்புடைய 7 போ் வராததால் குறுக்கு விசாரணை ஏதும் நடைபெறவில்லை. இதைத் தொடா்ந்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் நவம்பா் 19ஆம்தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி வடமலை உத்தரவிட்டாா்.