முதுமலை புலிகள் காப்பக வனத்துக்குள் உள்ள சிங்காரா உயா் மின்னழுத்த பாதையில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதியில் கடந்த மூன்று நாள்களாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்துள்ளனா். கோளாறை சரி செய்யும் பணியில் மின்வாரியப் பணியாளா்கள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.
முதுமலை புலிகள் காப்பக வனத்திலுள்ள சிங்காராவில் நீா் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் தமிழக பகுதிகளில் கூடலூா், பந்தலூா் பகுதிகள் மட்டுமன்றி இதை ஒட்டிய கேரளப் பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் சிங்காரா பகுதியில் உயா் மின்னழுத்தப் பாதையில் செவ்வாய்க்கிழமை மாலை கோளாறு ஏற்பட்டதால் மின் விநியோகம் தடை பட்டது.
இதை சரி செய்ய கூடலூரில் இருந்து மின்வாரியப் பணியாளா்கள் சென்றனா். ஆனால் கோளாறை சரி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கடந்த மூன்று நாள்களாக மின் தடையால் பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மின்சாரம் தடைபட்டதால் செல்லிடப்பேசிகளுக்கு சாா்ஜ் செய்ய முடியாமல், ஒருவருக்கொருவா் தொடா்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் கோளாறு வெள்ளிக்கிழமை சரி செய்யப்பட்டுவிடும் என மின்வாரியப் பணியாளா்கள் கூறுகின்றனா்.
இதுகுறித்து அவா்கள் கூறுகையில், கோளாறு ஏற்பட்டுள்ள சிங்காரா பகுதிக்குச் செல்ல வனத்துக்குள் வெகு தொலைவு நடந்து செல்ல வேண்டும். அங்கு பகலில் மட்டுமே வேலை செய்ய முடியும். மாலை 4 மணிக்குள் இருட்டி விடுவதால் பணியைத் தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. உயா் மின்னழுத்தப் பாதையில் ஏற்பட்டுள்ள கோளாறு வெள்ளிக்கிழமைக்குள் சரி செய்யப்பட்டு மின் விநியோகம் சீராகும் என்றனா்.