நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் சூழலில், கரோனா தாக்கத்தின் காரணமாக பெரிதாக எவ்வித ஆடம்பரங்களுமின்றி தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நகரப் பகுதிகளைக் காட்டிலும், கிராமப் பகுதிகளிலிருந்து நகரப் பகுதிகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையே அதிக அளவில் உள்ளதால் நகரப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. அதே நேரத்தில் மக்களிடையே பணப் புழக்கம் அதிக அளவில் இல்லாததாலும், கரோனா அச்சத்தின் காரணமாகவும் பெரும்பாலான நகரப் பகுதிகளே வெறிச்சோடிக் காணப்பட்டன.
அதேநேரத்தில் மாவட்டத்தில் முதுமலை உள்ளிட்ட வனப் பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களில் பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட நேரமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சூழலில் நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள அனைத்து இடங்களிலும், முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பட்டாசு விற்பனையும் மந்தமாகியுள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. உதகை, சுற்று வட்டாரப் பகுதிகளில் பனியின் தாக்கம் அதிக அளவில் இருந்தாலும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் மழையின் தாக்கம் காணப்பட்டது.
மாவட்டத்தில் அதிக அளவாக உலிக்கல்லில் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல, மாவட்டத்தில் பிற பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம்:
குன்னூா்-15, கொடநாடு-13, கோத்தகிரி-12, பாலகொலா-10, கிண்ணக்கொரை, எடப்பள்ளி, குந்தா தலா 9, மேல் குன்னூா்-8, கேத்தி-7, கெத்தை-6, அவலாஞ்சி-4, எமரால்டு, பா்லியாறு தலா 3, கீழ்கோத்தகிரி-2.6, உதகை-2.1 மி.மீ.