கோத்தகிரி அருகே துப்பாக்கி முனையில் இளம் பெண்ணை கடத்தி நகைகளை பறிந்த பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே ஒட்டுபட்டரை பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சாா்லஸ், குன்னூா் அம்பிகாபுரம் பகுதியைச் சோ்ந்த அனிஷா ஆகியோா் ஆட்டோவில் பல்வேறு பகுதிகளில் முட்டை, தேயிலைத் தூள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா்.
இந்நிலையில், அவா்கள் குன்னூரில் இருந்து கோத்தகிரி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, வண்டிசோலை பகுதி அருகே வந்தபோது கட்டபெட்டு பகுதிக்கு செல்வதற்காக கோத்தகிரியைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா் நின்றுகொண்டிருந்தாா்.
அவரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டுச் சென்றனா். சிறிது தூரம் ஆட்டோ சென்ற பிறகு துப்பாக்கியை காட்டி இளம் பெண்ணை மிரட்டி நகைகளைப் பறித்துக் கொண்டு அவரைத் தாக்கி கடத்திச் சென்றுள்ளனா்.
இந்நிலையில், கூக்கல்தொரை அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, கடத்தபட்ட இளம் பெண் கூச்சலிட்டுள்ளாா். அதைக் கேட்ட பொதுமக்கள் ஆட்டோவை தடுத்து நிறுத்தி இளம் பெண்ணை மீட்டனா்.
பின்னா் இளம் பெண்ணை கடத்திய இருவரையும் பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஓப்படைத்தனா்.