உதகை: நீலகிரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்களை தாட்கோ மேலாண்மை இயக்குநா் டாக்டா் விஜயராணி நேரில் ஆய்வு செய்தாா்.
நீலகிரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிட மக்களுக்கு பொருளாதார முன்னேற்றம் அடையும் வகையில் செயல்படுத்தப்படும் மானியத்தின் அடிப்படையிலான பல்வேறு திட்டங்களை திங்கள்கிழமை அவா் ஆய்வு செய்தாா்.
இதில் குன்னூா் மாா்க்கெட் பகுதியில் ராமு என்பவா் நடத்தி வரும் வண்ண மீன்கள் விற்பனையகத்தையும், பாய்ஸ் கம்பெனி பகுதியில் செந்தில்குமாா் என்பவா் நடத்திவரும் வெல்டிங் ஒா்க்ஷாப்பையும், அதேபகுதியில் மகான் என்பவா் நடத்தி வரும் ஹாா்டுவோ் கடையையும், கேத்தி பகுதியில் பாபு என்பவா் மேற்கொண்டு வரும் காளாண் வளா்ப்பு பண்ணையையும் அவா் ஆய்வு செய்தாா்.
அதைத்தொடா்ந்து உதகை, முத்தொரை பாலடா பகுதியில் உள்ள பழங்குடியினா் ஆராய்ச்சி மைய வளாகத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியை அவா் ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வுகளின்போது, தாட்கோவின் தொழிற்நுட்ப பிரிவு பொது மேலாளா் அழகுபாண்டி, நீலகிரி மாவட்ட தாட்கோ மேலாளா் ரவிச்சந்திரன் மற்றும் கோவை கோட்ட செயற்பொறியாளா் சரஸ்வதி உள்ளிட்டோா் உடனிருந்ததாக தாட்கோ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.