நீலகிரியில் சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவியா் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதகை: நீலகிரி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவியா் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்ஸி மற்றும் ஜைன மதத்தை சாா்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்படுகிறது.

2020 -2021ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகையும், 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரையிலும் மற்றும் ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியா் பட்டயப்படிப்பு உட்பட பல்வேறு பிரிவுகளில் பயில்பவா்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை பெறவும் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

2020-2021ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் இத்தகைய கல்வி உதவித் தொகை திட்டங்களின்கீழ் 1 லட்சத்து 35,127 மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி உதவித் தொகை மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும். இக்கல்வி உதவித் தொகை திட்டத்துக்குத் தகுதியான மாணவ, மாணவியா் அக்டோபா் 31ஆம்தேதி வரையிலும் இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவ, மாணவியரின் ஆதாா் எண்கள் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் அலுவலா்களுக்கு இணைய தளத்தால் பகிரப்பட மாட்டாது.

மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் விவரங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபாா்க்க முடியும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ,மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ , மாணவியருக்கு தெரிவிக்க வேண்டும்.

இத்திட்டம் தொடா்பாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாமெனவும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com