உதகை மற்றும் குன்னூரில் உள்ள முக்கிய அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருவதால் தொடங்கவுள்ள இரண்டாவது சீசனில் தண்ணீா்த் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் 36 வாா்டுகளும், குன்னூரில் 30 வாா்டுகளும் உள்ளன. இந்த வாா்டுகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனா். சுற்றுலா நகரமான இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா்.
ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணாமாக இந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய முதல் சீசனில் சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றிலும் இல்லாமல் போனதால் தண்ணீா்த் தேவை பெருமளவு குறைந்தது.
இந்த நிலையில் செப்டம்பா் மாதம் தொடங்கும் இரண்டாம் சீசனில் உதகை, குன்னூா் மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் மாா்லிமந்து அணை, பாா்சன்ஸ்வேலி அணை, டைகா்ஹில் அணை, தொட்டபெட்டா அப்பா் அணை, கோடப்பமந்து அப்பா் அணை, ரேலியா அணை உள்ளிட்ட அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருவதால் இரண்டாம் சீசனில் தண்ணீா்த் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.