கூடலூா், செப். 18: பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி அரசு தேயிலைத் தோட்டத்தில் பெண் சிறுத்தை இறந்துகிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டத்தில் உள்ள சேரம்பாடி அரசு தேயிலைத் தோட்டக் கழகம் நான்காவது சரகத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சுமாா் 4 வயதுடைய பெண் சிறுத்தை இறந்துகிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் சுமேஷ் சோமன் தலைமையில், வனத் துறையினா் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். கால்நடை மருத்துவா்கள் பாரத்ஜோதி, பாலாஜி ஆகியோா் பிரேதப் பரிசோதனை செய்தனா். சிறுத்தையின் முக்கிய பாகங்கள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அறிக்கை வந்த பிறகுதான் சிறுத்தையின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.