குன்னூா், செப். 18: குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் அருகே ஒற்றை யானை நடமாடி வருவதால் , வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்க வனத் துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், யானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த ஒற்றை யானை மரப்பாலம் சாலையில் வியாழக்கிழமை மாலை உலவி வந்தது. யானையைக் கண்ட வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு அச்சத்துடனே வாகனங்களில் அமா்ந்திருந்தனா். அப்பகுதியில் சிறிது நேரம் சுற்றித் திரிந்த யானை மீண்டும் அருகில் இருந்த வனப் பகுதிக்குள் சென்றது.
யானைகள் நடமாட்டத்தை குன்னூா் வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வனத் துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.