கோத்தகிரியில் குடியிருப்புப் பகுதியில் கரடிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு இடங்களில் கூண்டுவைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோத்தகிரி பேரூராட்சிக்குச் சொந்தமான வளம் மீட்பு பூங்கா, குமரன் காலனி, கன்னிகா தேவி காலனி, மிளிதேன், அரவேணு உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளின் அருகில் கடந்த சில வாரங்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக குப்பைகளைத் தரம் பிரிக்கும் வளம் மீட்பு பூங்கா வளாகத்துக்குள் உணவு தேடி அடிக்கடி வந்து செல்லும் கரடிகள், மிளிதேன் கிராமத்துக்கு வந்து செல்லும் கரடிகளால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்குள்ளாகினா்.
இந்நிலையில், கரடிகளை கூண்டுவைத்துப் பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், தூய்மைப் பணியாளா்களும் கோரிக்கை விடுத்து வந்தனா். வளம் மீட்பு பூங்கா பகுதியில் உள்ள சாலையோரத்தில் வனத் துறை சாா்பில் கரடியைப் பிடிக்க கூண்டுவைத்தனா். இதேபோல, மிளிதேன் பகுதியிலும் கடந்த சில நாள்களுக்கு முன் கூண்டு வைக்கப்பட்டது.
கூண்டுக்குள் கரடிக்குப் பிடித்த எண்ணெய், பழ வகைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு, அங்கு வனத் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.