குன்னூா், கோத்தகிரி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஓணம் பண்டிகை வெகுசிறப்பாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கேரள மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ளதால் இங்கு அதிக அளவிலான கேரள மக்கள் வாழ்ந்து வருகின்றனா். ஓணம் பண்டிகையையொட்டி அவா்கள் மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக அத்தப்பூக் கோலமிட்டு கொண்டாடி மகிழ்ந்தனா்.
குன்னூா், கோத்தகிரி சுற்று வட்டாரத்தில் வாழ்ந்து வரும் மலையாள மக்கள் கடந்த 10 நாள்களாக வீட்டின் வாசலில் பல்வேறு வண்ண மலா்களைக் கொண்டு அத்தப்பூக் கோலமிட்டு வந்தனா். இந்தப் பண்டிகையின் முக்கிய நிகழ்வான திருவோணம் நாளான சனிக்கிழமை அதிகாலை எழுந்து பெண்கள் புத்தாடை அணிந்து வீட்டு வாசல்களில் மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக வண்ணப் பூக்களாலான அத்தப்பூக் கோலமிட்டிருந்தனா்.
பின்னா், கோயில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்தி வழிபட்ட அவா்கள், மதியம் பலவகை உணவுகளுடன் கூடிய ஓணம் சத்யா எனப்படும் உணவுகளைத் தயாரித்து குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்களுடன் உண்டு மகிழ்ந்தனா்.