கூடலூா் பகுதியில் காட்டு யானைகள் தொடா்ந்து குடியிருப்புகளைசேதப்படுத்தி வருவது குறித்து சட்டப் பேரவையில் வியாழக்கிழமை சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வந்ததாக கூடலூா் எம்.எல்.ஏ.பொன்.ஜெயசீலன் தெரிவித்தாா்.
தீா்மானத்தில் அவா் கூறியதாவது:
கூடலூா் தொகுதியிலுள்ள நாடுகாணி, புளியம்பாறை, கோழிக்கொல்லி, தேவாலா, அட்டி, ஆமைக்குளம் போன்ற பகுதிகளில் கடந்த 17ஆம் தேதி முதல் காட்டு யானைகள் கூட்டம் குடியிருப்புகளை சேதப்படுத்தி வருகின்றன. இதற்கு அரசு தரப்பில் இதுவரை எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. யானைகளை அந்தப் பகுதியிலிருந்து நிரந்தரமாக விரட்டி தொலைவிலுள்ள வனப் பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டு யானைகள் சேதப்படுத்திய வீடுகளை புனரமைக்க தலா ரூ.25 ஆயிரம் வழங்கவேண்டும். ஊருக்குள் யானைகள் நுழையாமல் தடுக்க ஆழமான அகழிகளை அமைத்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தாா்.