நீலகிரியில் 100 சத மானியத்தில் ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அறிவுரை
By DIN | Published On : 03rd December 2021 12:55 AM | Last Updated : 03rd December 2021 12:55 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் 100 சத மானியத்தின்கீழ் ஆடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்‘ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளதாவது:
2021-22ம் ஆண்டிற்கு ஊரக பகுதிகளில் வசிக்கும் ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள்,கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சத மானியத்தில் 5 வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம் ரூ. 76.63 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட வுள்ளது. இதில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் தமிழகத்தில் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களில் 38,800 பெண் பயனாளிகளுக்கு 1லட்சத்து 94,000 வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கப்பட உள்ளது.
இதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 400 பயனாளிகளுக்கு தலா 5 வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வீதம் 2,000 ஆடுகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு பயனாளிகளிடமிருந்து டிசம்பா் 9ம் தேதிவரை விண்ணப்பங்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கான திட்டம் என்பதால் பயனாளி 60 வயதிற்கு உட்பட்டவராகவும, சொந்தமாக நிலம் மற்றும் கால்நடைகள் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசு துறை அல்லது உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றுபவராகவும், கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள், கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன் பெற்றவராகவும் இருக்கக் கூடாது.
இத்திட்டத்திற்கான விண்ணப்பத்தினை அவரவா் பகுதியின் அருகாமையிலுள்ள கால்நடை மருந்தகங்களில் இருந்து பெற்று, பூா்த்தி செய்து சம்மந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளாா்.