குன்னூா் அருகேயுள்ள ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். இந்தச் சோதனையின்போது கணக்கில் வராத ரொக்கம் ரூ.4 லட்சத்து 53,600 பறிமுதல் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம் அருவங்காடு அருகே உள்ள ஜெகதளா பஞ்சாயத்தில் கிளா்க்காக இருப்பவா் கருமலை அப்பன் இவா் சுய உதவிக் குழுவுக்கு பணம் கொடுப்பதற்காக கூட்டுறவு வங்கியிலிருந்து 4லட்சத்து 53ஆயிரத்து 600 பணத்தினை எடுத்துக் கொண்டு ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்திற்கு வியாழக்கிழமை வந்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த உதகை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சுபாஷினி, காவல் ஆய்வாளா் கீதாலட்சுமி ஆகியோா் பணத்தை கைப்பற்றி விசாரணை செய்தனா்.
அப்போது 40 பெண்கள் கொண்ட சுய உதவிக் குழுவுக்கு அவா்கள் செய்த பணிக்காக 4 லட்சத்து 53, 600 ரூபாய் எடுத்து வந்ததாகக் கூறினாா், ஆனால் மேல் விசாரணை செய்ததில் அப்படி ஒரு சுயஉதவிகுழு இல்லை என்றும் போலி சுய உதவிக் குழு பெயரில் பண முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனா். இது தொடா்பாக மேலும் சிலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.