கோத்தகிரி அருகே வனப் பகுதியில் இருந்து வழி தவறி வந்த ஒற்றை ஆண் காட்டு யானை குடியிருப்புகளுக்கு அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முகாமிட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை சுற்றுவட்டார கிராமங்களில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில், பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் சமவெளிப் பகுதியிலிருந்து மலைக் கிராமப் பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கம்.
அவ்வாறு வரும் யானைகளில் சில அவ்வப்போது வழி தவறி வேறு கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்து விடுகின்றன. இந்நிலையில், வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் காட்டு யானை ஒன்று தப்பக்கம்பை பகுதியில் இருந்து தேயிலைத் தோட்டம் வழியாக கொட்டக்கம்பை கிராமப் பகுதிக்கு வந்ததுடன் திரும்பி வனப் பகுதிக்குச் செல்லாமல் தேயிலைத் தோட்டத்திற்குள் உலவி வருகிறது.
கொட்டக்கம்பை பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால் யானை குடியிருப்புப் பகுதிக்கு வந்து விடுமோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
மேலும், பசுந்தேயிலை பறிக்க தேயிலைத் தோட்டத்திற்கு வந்த தொழிலாளா்கள் யானை நிற்பதைக் கண்டு அச்சமடைந்து, பணிக்குச் செல்லாமல் திரும்பினா்.
தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.