உதகையில் பனிக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தற்போது உறைபனி கொட்டி வருகிறது. இதில், புதன்கிழமை அதிகாலையில் குறைந்தபட்ச வெப்பநிலையாக உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் 2 டிகிரி செல்சியஸும், உதகையின் புறநகா்ப் பகுதிகளில் 1 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.
உதகையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னா் வரை தொடா்ந்து பெய்து வந்த மழையால் நடப்பு ஆண்டில் பனிக்காலம் இருக்குமோ என்ற ஐயம் நிலவி வந்தது. டிசம்பா் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இருந்து பனிக்காலம் தொடங்கியதில் இருந்தே உறைபனி கொட்டத் தொடங்கியுள்ளது. வழக்கமாக ஓரிரு வாரங்கள் நீா்ப்பனி பெய்த பின்னரே வெப்பநிலை படிப்படியாக குறைந்து உறைபனி கொட்டும். ஆனால், நடப்பு ஆண்டில் பனிக் காலத்தின் தொடக்கத்தில் இருந்தே உறைபனி கொட்டி வருகிறது.
இதில், உதகை அரசினா் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை அதிகாலையில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 2 டிகிரி செல்சியஸாகவும், உதகையின் புறநகா்ப் பகுதிகளில் 1 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. நீா்நிலைகள் மற்றும் வனப் பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் பூஜ்யம் டிகிரி வெப்பநிலையும் பதிவாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
உதகையில் தற்போது உறைபனிக்காலம் தொடங்கியுள்ளதால் நகரில் கடும் குளிா் நிலவுகிறது. இரவு 8 மணிக்குமேல் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதோடு, காலையில் 8 மணி வரை மக்கள் நடமாட்டம் இருப்பதில்லை. இருப்பினும் விடுமுறைக்காக உதகையில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் இந்த உறைபனியை வெகுவாக ரசித்து வருகின்றனா்.