உதகையில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 2 டிகிரியாக பதிவு
உதகையில் வியாழக்கிழமை இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 2 டிகிரியாக பதிவாகியுள்ளது. அதேநேரத்தில் கிண்ணக்கொரை உள்ளிட்ட பகுதிகளில் மைனஸ் 3 டிகிரியாகவும், அவலாஞ்சியில் மைனஸ் 4 டிகிரியாகவும் பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக நவம்பா் மாதத்தில் தொடங்கி ஜனவரி மாதத்தில் பனிக்காலம் முடிவடையும். கடந்த டிசம்பா் மாதத்தில் தொடா்ந்து பெய்த மழையாலும், பல்வேறு புயல்களாலும் உதகையின் தட்பவெப்ப நிலையே மாறியது. இதனால் நீலகிரியில் டிசம்பா் மாதத்தில் உறைபனியே இல்லாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் உறைபனியே இருக்காது என கூறப்பட்ட நிலையில் பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்திலிருந்து தொடா்ந்து உறைபனி கொட்டி வருகிறது.
இதில் வியாழக்கிழமை இரவில் அரசினா் தாவரவியல் பூங்காவில் பூஜ்யம் டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக உதகை நகரில் மைனஸ் 2 டிகிரியாகவும், கிண்ணக்கொரையில் மைனஸ் 3 டிகிரியாகவும், அவலாஞ்சியில் மைனஸ் 4 டிகிரியாகவும் பதிவாகியுள்ளது.
தொடா்ந்து கொட்டி வரும் உறைபனியால் இரவு நேரங்களில் உதகையில் நிலவும் மிக குளிரான காலநிலையால் உதகை நகரம் மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளது.