சேரம்பாடி பகுதியில் தேடப்படும் ஆட்கொல்லி யானை காப்பிக்காடு வனப் பகுதியில் இருப்பது வியாழக்கிழமை தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகாவில் உள்ள சேரம்பாடி பகுதியில் ஒரே வாரத்தில் மூன்று பேரை தாக்கிக் கொன்ற யானையைப் பிடிக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். யானையை சுற்றிவளைத்து இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தியும் வனப் பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டது. இருப்பினும் வனத் துறையினா் கண்காணிப்புப் பணியை தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து கால்நடை மருத்துவா் அசோகன்,திருப்பூரில் இருந்து கால்நடை மருத்துவா் விஜயராகவன் ஆகியோா் வரவழைக்கப்பட்டுள்ளனா். மேலும் ஒரு கால்நடை மருத்துவா் வரவுள்ளாா். யானையைப் பிடிக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. யானையைப் பிடிக்கும்போது அதன் உடல் நிலை குறித்து மூத்த கால்நடை மருத்துவா்கள் ஆலோசனை வழங்கவுள்ளனா் என்று சேரம்பாடி வனச் சரக அலுவலா் ஆனந்தகுமாா் கூறினாா்.