நீலகிரி மாவட்டத்தின் 91ஆவது காவல் கண்காணிப்பாளராக ஆா்.பாண்டியராஜன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை காவல் கண்காணிப்பாளராக இருந்த சசி மோகன் சென்னை, கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக பணியிட மாறுதலாகி சென்றுவிட்டாா்.
இந்நிலையில் சென்னையில் வணிக குற்றவியல் பிரிவு காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆா்.பாண்டியராஜன் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா். இவா் உதகையில் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
அதன்பின்னா் செய்தியாளா்களிடம் ஆா்.பாண்டியராஜன் கூறியதாவது:
விரைவில் கோடை சீசன் மற்றும் தோ்தல் காலங்கள் வர உள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பராமரிப்புக்கும், போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். கல்லட்டி மலைப்பாதையில் அண்மையில் எதற்காக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்கும் நான்காவது அதிகாரி இவா் என்பது குறிப்பிடத்தக்கது.