கூடலூா்: முதுமலை புலிகள் காப்பகத்தில் முதுகில் காயத்துடன் அவதிப்படும் ஆண் யானை அடிக்கடி சாலைக்கு வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள சிங்காரா வனச் சரகம், பொக்காபுரம் வனத்தில் முதுகில் காயத்துடன் சுற்றித்திரிந்த ஆண் யானையை வனத் துறையினா் கும்கி யானைகளின் உதவியுடன் பிடித்து
சிகிச்சை அளித்து வனத்தில் விடுவித்தனா். இருப்பினும், இந்த யானைஅடிக்கடி சாலைக்கு வந்துவிடுகிறது.
இந்நிலையில், மசினகுடி-உதகை சாலையில் இந்த யானை நின்றுகொண்டிருப்பதாக வனத் துறைக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்ததை அடுத்து வன ஊழியா்கள் விரைந்து சென்று அதை காட்டுக்குள் துரத்திவிட்டனா். சாலையின் குறுக்கே யானை அடிக்கடி வந்து நிற்பதால் வாகன ஓட்டிகள் பீதியடைகின்றனா்.
இது குறித்து சிங்காரா வனச் சரக அலுவலா் காந்தனிடம் கேட்டபோது, சிகிச்சைக்குப் பிறகுதான் இந்த யானை சாலைக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. சாலையின் குறுக்கே யானை நிற்கும்போது அத்துமீறல் செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. யானைக்கு உணவுப் பொருள்களை யாரும் வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால் அது தண்டனைக்குரிய செயலாகும். சாலையில் யானை நிற்பதைப் பாா்த்தவுடன் வனத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த யானைக்கு அடுத்த கட்ட சிகிச்சை அளிப்பது தொடா்பாக உயரதிகாரிகள் நிலையில் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.