நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 30 தேயிலைத் தோட்ட தொழிற்சாலைகளுக்கு தென்னிந்திய தேயிலை வாரியம் நோட்டீஸ் வழங்கி விளக்கம் கேட்டுள்ளது.
இது குறித்து தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநா் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தில் தேயிலைத் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தரமற்ற தேயிலைத் தூள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளால் தென்னிந்திய தேயிலைக்கு விலை குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களில் நீலகிரியில் உள்ள 43 தோட்டத் தொழிற்சாலைகளில் இந்திய தேயிலை வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினா்.
இதில் தரமான பசுந்தேயிலை கொள்முதலின்மை, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் தேயிலைக் கழிவுகளை சோ்த்து வைத்தல், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக தனியாரிடமிருந்து பச்சை தேயிலை கொள்முதல் செய்தல், சுகாதாரமின்மை, சட்ட ஆவணங்கள் பராமரிப்பின்மை போன்ற பல்வேறு காரணங்களுக்காக 30 தேயிலைத் தோட்ட தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தேயிலைத் தொழிற்சாலைகளிடம் இருந்து சரியான விளக்கம் கிடைக்காவிட்டால் தேயிலை சந்தைப்படுத்துதல் கட்டுப்பாடு ஆணை மற்றும் தேயிலைக் கழிவு கட்டுப்பாடு ஆணையின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.