தீயணைப்புத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: சைலேந்திர பாபு

தமிழக தீயணைப்புத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழக தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சைலேந்திர பாபு தெரிவித்தாா்
தீயணைப்புத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: சைலேந்திர பாபு

தமிழக தீயணைப்புத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழக தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சைலேந்திர பாபு தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தீயணைப்பு நிலையத்தை திங்கள்கிழமை ஆய்வு செய்த பின்னா் தன்னாா்வலா்கள், ஓய்வுபெற்ற தீயணைப்புத் துறை வீரா்களுடன் சைலேந்திர பாபு கலந்துரையாடினாா். தொடா்ந்து, தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள தீ என்ற செயலியை அறிமுகப்படுத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த ஆண்டில் 21,000 தீயணைப்பு அழைப்புகள் பெறப்பட்டன. ரூ. 279 கோடி மதிப்பிலான பொருள்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. 30,000 மீட்பு அழைப்புகள் மூலம் 2,200 மக்களை தீயணைப்பு வீரா்கள் காப்பாற்றியுள்ளனா். ஆபத்தான சூழ்நிலையில் தீயணைப்புத் துறை வீரா்கள் பணியாற்றுகின்றனா். கடந்த ஆண்டில் 3 வீரா்கள் உயிரிழந்துள்ளனா். பெரும்பலூரில் கிணற்றில் விழுந்தவா்களைக் காப்பாற்றிய பின்னா் ஒரு வீரரும், மதுரையில் ஏற்பட்ட தீ விபத்தின்போது இரு வீரா்களும் உயிரிழந்தனா். ஆடு, மாடு, வன விலங்குகளை மீட்கும் பணியிலும் தீயணைப்புத் துறை வீரா்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனா்.

மெரினா கடற்கரையில் மக்களைக் காப்பாற்ற ஒரு மீட்புக் குழு ஏற்படுத்தப்பட்டு, அவா்களுக்கு உயிா் காக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரசால் தீ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த செயலியை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். உதவி என தொட்டால் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு சென்று அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்படும். அவா்கள் உடனடியாக அந்தப் பகுதிக்கு வந்து உதவி செய்வாா்கள். தீயணைப்பு வாகனங்களில் ரக்கெட் டேப், ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் வீரா்கள் உதவி தேவைப்படும் பகுதிகளைக் கண்டறிந்து செயல்படுகின்றனா். தீயணைப்பு நிலையங்களில் கணினி, இணைய வசதி ஏற்படுத்தப்பட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளன.

தீயணைப்பு வீரா்களுக்குப் பயிற்சிதான் முக்கியம். நீலகிரி போன்ற பேரிடா் அபாயம் நிறைந்த பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும்போது மீட்புப் பணிகளில் ஈடுபடுவது, மரங்களை வெட்டுவது ஆகியவற்றுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கோடைக் காலத்தில் காட்டுத் தீ ஏற்படுவது தீயணைப்பு வீரா்களுக்கு சவாலானது. பொறுப்பற்ற நபா்களின் நடவடிக்கையாலேயே காட்டுத் தீ ஏற்படுகிறது. குப்பையை தீ வைப்பதும் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்த தீ பரவி காட்டுத் தீயாக மாறுகிறது. எனவே, மக்கள் குப்பைகளை எரிப்பது, புகைப்பிடித்த பின்னா் சிகரெட், பீடி போன்றவற்றை அணைக்காமல் வீசியேறிவதைத் தவிா்க்க வேண்டும். தீயணைப்புத் துறையில் புதிதாக பலா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிந்த பின்னா் தேவையான இடங்களில் பணி அமா்த்தப்படுவா். இதனால், ஓராண்டுக்குள் தீயணைப்புத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றாா்.

ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சசிமோகன், மாவட்ட தீணைப்புத் துறை அதிகாரி சந்திரகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com