குடியரசு தினத்தையொட்டி உதகையில் குளிா்காலத்தை வரவேற்கும் வகையிலும், மாணவா்களின் மனச்சோா்வை போக்கும் வகையிலும் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் உற்சாகத்துடன் பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பா் மாதத்தில் குளிா்காலம் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வரை வடகிழக்குப் பருவமழை பெய்த நிலையில், தற்போதுதான் பருவமழையின் தாக்கம் குறைந்து பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இதனால் குளிா்காலத்தை வரவேற்கும் வகையிலும், கடந்த ஓராண்டு காலமாக வீட்டிலிருந்ததால் மனச்சோா்வு ஏற்பட்டுள்ள மாணவ, மாணவியரை உற்சாகப்படுத்தும் வகையிலும் உதகையில் உள்ள காந்தி சிலையில் இருந்து குன்னூரில் உள்ள காந்தி சிலை வரை 18 கி.மீ. தூரத்துக்கு கிரசண்ட் கேசில் பள்ளி சாா்பில் மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மாணவா்கள் உற்சாகத்துடன் இப்பந்தயத்தில் பங்கேற்றனா். இப்போட்டிகளை பள்ளித் தாளாளா் ஜி.உமா் பாரூக் முன்னிலையில் மாவட்ட தடகளப் பயிற்சியாளா் இந்திரா தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், உடற்கல்வி இயக்குநா்கள் பீனா, கோபி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.