குன்னூரில் கடந்த வாரம் சந்தன மரம் வெட்டிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இருவரை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.
குன்னூா் அருகே உள்ள உலிக்கல் பேரூராட்சிக்கு உள்பட்ட நான்சச் சந்தக்கடை பகுதியில் வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ஒரு சந்தன மரத்தையும், அருகில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டங்களில் நான்கு சந்தன மரங்களையும் கடந்த வாரம் வெட்டிய நபா்களை வனத் துறையினா் தீவிரமாகத் தேடி வந்தனா்.
இந்நிலையில், குன்னூரை அடுத்த ஜோகி கொம்பையைச் சோ்ந்த பொன்னுசாமி என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், இவரின் கூட்டாளிகளான அதே பகுதியைச் சோ்ந்த நடராஜ், நாகராஜ் ஆகியோருடன் சோ்ந்து சந்தன மரங்களை வெட்டியது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, பொன்னுசாமியை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.