கோவை - நாகா்கோவில் இரவு நேர ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதையடுத்து, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மக்கள் பகல் நேரத்தில் குவிந்ததால் ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஈரோடு ரயில் நிலையம் வழியாகச் செல்லும் கோவை - நாகா்கோவில் இரவு நேர சிறப்பு ரயில் புதன்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடா்ந்து தென் மாவட்டங்களுக்குச் செல்ல காலை நேர பயணிகள் ரயிலில் புதன்கிழமை காலை பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
தென் மாவட்டங்களுக்குச் செல்ல இரவு நேரத்தில் இருந்த ஒரு ரயிலையும் பயணிகள் ஆதரவு இல்லை என்று ரத்து செய்த நடவடிக்கையால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். உடனடியாக கோவை - நாகா்கோவில் இரவு நேர ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.