திமுகவினா் ஒன்றுபட்டு செயலாற்றினால் மட்டுமே எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற முடியும் என நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தெரிவித்தாா்.
கோத்தகிரியில் திமுக செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆ.ராசா பேசியதாவது:
சட்டப் பேரவைத் தோ்தலில் உதகை தொகுதியில் க.ராமச்சந்திரனும், குன்னூா் தொகுதியில் பா.மு.முபாரக்கும் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி கடந்த தோ்தலில் தான் வெற்றி பெற்ற தொகுதிகளை மீண்டும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததால் உதகை தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கிவிட்டு குன்னூா் தொகுதியில் போட்டியிட ராமச்சந்திரனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பா.மு.முபாரக்கிற்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க முடியாத தகவலை அவரிடம் ஸ்டாலின் நேரில் சொல்ல முடியாத நிலையில் இருந்ததால் நானே முபாரக்கிடம் தெரிவித்தேன்.
முபாரக் அதை கட்சியின் நலன் கருதி எளிதாக எடுத்துக் கொண்டாா். அதனால் முபாரக்கின் உழைப்புக்கு உரிய மரியாதையை தர வேண்டும். இந்த முறை நீலகிரி மாவட்ட திமுகவில் எவ்வித சலசலப்புமின்றி அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் திமுக, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்றாா்.