கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் 9ஆவது முறையாகப் போட்டியிடும் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வாக்கு சேகரிப்பில் சனிக்கிழமை ஈடுபட்டாா்.
நம்பியூா் பகுதியில் புதுச்சூரிபாளையத்தில் பிரசாரத்தை தொடங்கிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், கொன்னமடை, குப்பிபாளையம், மொட்டணம், அழகம்பாளையம், நம்பியூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, நம்பியூா் பகுதியில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி தட்டுடன் வரிசையில் நின்று அமைச்சா் செங்கோட்டையனை வரவேற்று ஆரத்தி எடுத்தனா்.
தொடா்ந்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், அதிமுக அறிவித்துள்ள தோ்தல் அறிக்கை குறித்தும், அதில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் குறித்தும் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தாா்.